search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு"

    ஆத்தூர் அருகே அ.தி.மு.க. பிரமுகரை ஹெல்மெட் அணிந்து வந்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே புத்திரகவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் உமாபதி (வயது 50). இவர் புத்திரகவுண்டம் பாளையம் பஸ் நிலையம் அருகில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அ.தி.மு.க மாவட்ட பிரதிநிதியாகயும் உள்ளார்.

    நேற்று இரவு 10 மணி அளவில் வியாபாரத்தை முடித்து விட்டு உமாபதி கடையை அடைத்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தப்படி 2 மர்ம நபர்கள் அங்கு வந்து அரிவாள் மற்றும் இரும்பு கம்பியால் உமாபதியை சரமாரியாக தாக்கினார்கள். இதில் உமாபதி நிலைகுலைந்தார். அப்போது மர்ம நபர்களின் ஒருவன் அரிவாளால் உமாபதியின் முகத்தில் வெட்டினான். இதனால் அவர் கைகளால் அந்த அரிவாளை தடுக்க முயன்றார். ஆனால், மர்மநபர், வெறித்தனமாக கைகளிலும், தலையிலும் வெட்டினான். இதனால் முகத்தின் ஒரு புறம் பிளந்தது.

    மேலும் மற்றொருவன், பின்புறமாக நின்று அவரை இரும்பு கம்பியை கொண்டு முதுகில் ஓங்கி, ஓங்கி அடித்தான். இதில் பலத்த காயம் அடைந்த உமாபதி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததால் இறந்து விட்டதாக நினைத்து மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் சிறிது நேரத்திலேயே நடந்து முடிந்தது.

    இரவு 10 மணி என்பதால் மக்கள் நடமாட்டம் அந்த பகுதியில் அதிகமாக இல்லை. அக்கம் பக்கத்தில் கடை வைத்திருப்பவர்கள் கடையை பூட்டி விட்டு அந்த வழியாக வந்தபோது உமாபதி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து, அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஏத்தாப்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் மற்றும் போலீசார் புத்திரகவுண்டம் பாளையம் பஸ் நிலையத்திற்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    உமாபதியை கொலை செய்ய முயன்ற 2 பேரும் யார்? என்பதை கண்டுபிடிக்க பழக்கடையின் அருகில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராவை பார்த்து ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கொலை வெறி தாக்குதல் சம்பவம் தொழில் போட்டியா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உமாபதி வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதி அதிமுக பிரமுகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×